Sky is blue - Why?

வானம் ஏன் நீல நிறம்

வழக்கமான க்விஸ் கேள்வி போலாகிவிட்டது இது. இருந்தாலும் உங்களிடம் பதில் உள்ளதா? ஆதிசங்கரர் கூட இதைப் பற்றி கூறியிருக்கிறார்.

வழக்கமான க்விஸ் கேள்வி போலாகிவிட்டது இது. இருந்தாலும் உங்களிடம் பதில் உள்ளதா?
வானத்தில் கானும் நீல நிறம் கடலின் பிரதிபலிப்பல்ல. மாறாக கடல் தான் வானத்தை பிரதிபலிப்பதால் நீல நிறம் பெறுகிறது.

வின்வெளியில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால் சூரிய வெளிச்சம் படும் பொருட்கள் தவிர சுற்றிலும் கருப்பாகவே இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டும் நீல நிறமாகத் தெரிவதேன்?

பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.

சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே, அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே, ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு (frequency). வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும், சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.

ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும், காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள், நீர்த்துளிகள், பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)

நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான். அதனால் தான் 'பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி நீல நிறமாக இருக்கும்' என்று ஆதி சங்கரர் கேட்டார். இதைப்பற்றி சற்று தெளிவாகப் 'பார்க்கலாம்'!

உதாரணமாக: நாம் பார்க்கும் பருத்தி உடை பச்சை நிறம் என்றால், அந்த உடையில் படும் ஒளியில் பச்சை நிறத்திற்கான துடிப்பு மட்டும் திரும்பி வருகிறது, அது நம் கண்களில் படும் போது பச்சைச் சட்டை என உணருகிறோம். இருட்டில் எதுவும் கண்ணுக்கு தெரியாததன் காரணமும், பொருட்களில் இருந்து எந்த ஒளியும் நம் கண்ணுக்கு வந்து சேராதது தான். இதனால் தான் பனிமூட்டத்தில் அருகில் இருக்கும் நபர் கூட தெரிவதில்லை, மேகமில்லாத இரவில் நெடுந்தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தைக்கூட நம்மால் 'பார்க்க' முடிகிறது.

காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம். இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.