வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா. பூமிக்கு வெளியே விரிந்து பரந்து கிடக்கும் கற்பனைகெட்டாத தூரம் வரை விரிந்துள்ள பிரபஞ்சத்தை உணர்ந்தால் பூமியில் அல்ப விஷயத்திற்கெல்லாம் சண்டையிடும் எண்ணம் குறையும். மனம் விரிவடையும்.
இதற்கு தொலைநோக்கியில் தான் பார்க்க வேண்டுமென்பதில்லை. நம் வீட்டு மொட்டைமாடியில், இரவில் நின்று கவனித்தாலே போதும். முதலில் மிகவும் பிரகாசமான நமது அண்டைக்கிரகங்களையும், மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிகளுக்கான நட்சத்திரக் கூட்டங்களையும் எளிதாக அடையாளம் காணலாம். அதிலிருந்து பிற நட்சத்திரங்கள், அண்டங்கள் என மனதளவில் விரிந்து கொண்டே போகலாம்.
அண்டைக் கிரகங்கள்:
நிலாவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரகாசமாக தற்போது சூரிய அஸ்தமனத்திற்கு பின் இரவு 7.30 மணி வரை மேற்கு வானில் தெரியும் வெள்ளியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். நம்மை விட சூரியனுக்கு அருகிலிருக்கும் வெள்ளி (Venus) இருப்பதிலேயே அதிக உஷ்ணமான கிரகம். கிட்டத்தட்ட பூமியின் சைஸ். ஆனால் குறைந்தபட்ச வெப்பமே +446 டிகிரி செண்டிகிரேட் என்பதாலும், நச்சு வாயுக்கள் நிறைந்திருப்பதாலும் வெள்ளியில் உயிர்கள் வாழும் வாய்ப்பு இல்லை.சூரியனுக்கு மிக அருகிலிருக்கும் புதன், சூரியனின் அருகிலிருப்பதாலேயே நம் கண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. தற்போது மாலை வேளைகளில் சூரிய அஸ்தமனம் ஆனவுடன் சற்று நேரம் வரை மேற்கில் தொடுவானத்தில் (horizon) தெரியும்.
வியாழனும் சனியும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இரவில் தெளிவாகத் தெரியும். கடந்த 20 வருடங்களில் சனிக்கிரகம் இப்போது தான் பிரகாசமாக தெரிவதாக கூறப்படுகிறது. மாலையில் கிழக்கு வானில் மற்ற நட்சத்திரங்களை விட பிரகாசமாக தற்போது தெரிவது வியாழன், அதன் அருகிலேயே அதைவிட சற்று குறைந்த ஒளியுடன் ஆனால் மற்ற நட்சத்திரங்களை விடத் தெளிவாக தெரிவது சனி.